பார்லிமென்ட் தேர்தலில் நாடு முழுவதும் சில சினிமா நட்சத்திரங்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் கர்நாடகாவிலிருந்து நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை சுமலதா ஆகிய இருவரும் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளார்கள்.
நடிகை சுமலதா, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்தத் தொகுதியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.
பெங்களூரு மத்திய தொகுதியில் சுயோச்சையாகப் போட்டியிட நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று(மார்ச் 22) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, தேர்தல் நடத்தை விதியை மீறியதாக பிரகாஷ்ராஜ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சுமலதா, பிரகாஷ்ராஜ் இருவரும் சுயேச்சையாக வெற்றி பெற்றால் 52 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவிலிருந்து சுயேச்சையாக பார்லிமென்ட் செல்பவர்கள் என்ற பெருமையைப் பெறுவார்களாம். கன்னட மக்கள் இரண்டு திரைப் பிரபலங்களையும் வெற்றி பெற வைப்பார்களா என்பதுதான் தற்போதைய கேள்வி.