உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன.
ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
மொத்தம் மரணம் மூன்று வகை. இயல்பான மரணம் – அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு; இன்னொன்று கொலை – அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு; மூன்றாவது தற்கொலை – அது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.
அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது? தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?
தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.