‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன். அந்தப் படம் வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. திரையுலகத்தில் இயக்குனராக கவுதம் 20 ஆண்டைக் கடந்ததன் நிகழ்வு சிங்கப்பூரில் நடைபெற்றது. அதற்காக நடிகர் சூர்யா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் பேசுகையில், ‘நீங்க சொன்னீங்கன்னா மறுபடியும் கிடாரைத் தூக்க நான் ரெடி’ என்கிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த ‘காக்க காக்க, வாரணம் ஆயிரம்’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற படங்கள். ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் கிடார் வைத்துக் கொண்டு சூர்யா பாடிய பாடல், அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
மீண்டும் அவர்கள் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இணைய வேண்டியது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட சில காரணங்களால் பூஜையுடன் படம் நின்று போனது. அதன் பின் இருவரும் பிரிந்தனர். தற்போது மீண்டும் இருவருக்குள்ளும் நட்பு ஆரம்பமாகி உள்ளது.
சூர்யாவின் ஆசைக்கு பதிலளித்துள்ள கவுதம் மேனன், ‘ஆமாம், மீண்டும் உங்களை சீக்கிரமே கிட்டார் தூக்க சொல்வேன்” எனக் கூறியுள்ளார். அது ‘வாரணம் ஆயிரம்’ இரண்டாம் பாகமாக வருமா அல்லது மற்றொரு காதல் படமாக வருமா என்பது சீக்கிரமே தெரிய வரும்.

