மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தனது வாழ்க்கையே நாசமாகி விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் நடிகை மனிஷா கொய்ராலா.
தமிழில் மணிரத்னத்தின் பம்பாய் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. ரஜினி, கமல் என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சாம்ராட் டாகலை திருமணம் செய்து கொண்ட மனிஷா, பின் நடிப்பதற்கு ஓய்வு கொடுத்தார். ஆனால் அந்தத் திருமணம் தோல்வியில் முடிந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா, வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார். இதையடுத்து புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மனிஷா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இமாச்சலபிரதேச மாநிலம் கசுலி எனும் இடத்தில் நடந்த குஷ்வந்த் இலக்கிய திருவிழாவில் மனிஷா கொய்ராலா கலந்துகொண்டார். அந்த விழாவில், “எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த புத்தகம் எழுதினேன். என்னை பார்த்து யாரேனும் புற்றுநோயில் சிக்கி குணமடைந்தவர் என்று சொன்னால் அதற்காக வருத்தப்பட மாட்டேன்.
புற்றுநோய் பாதிப்பில் நான் சிக்கியதை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி மக்கள் ஒரு நாள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது நான் சாவை எதிர்கொண்டேன்.
ஆரம்பத்தில் இருந்த மது பழக்கத்தால் தான் எனது வாழ்க்கை மோசமாக மாறியது. அதை எனது புத்தகத்திலேயே கூறி இருக்கிறேன். மதுப்பழக்கத்தை விட்ட பிறகு, இப்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்படுகிறது”, என மனிஷா கொய்ராலா பேசினார்.

