பேச்சிப்பாறை அணையிலிருந்து 2 ஆவது நாளாக சனிக்கிழமை விநாடிக்கு 141 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர் இருப்பு போதிய அளவில் இல்லாத நிலையில், விவசாயிகளின் தீவிர கோரிக்கைக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அணையிலிருந்து முதலில் விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக விநியோகிக்கப்பட்ட நிலையில், 2 ஆவது நாளான சனிக்கிழமை திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 141 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
மாவட்டத்தில் தற்போது குளத்துப்புரவு பகுதிகளிலேயே அதிக அளவில் நடவுப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஏறக்குறைய 2000 ஏக்கர் பரப்பில் குளம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் நேரடி விதைப்பாகவும், நாற்றுகள் மூலமாகவும் நடவுகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் இப்பயிர்களை கருகாமல் காக்கும் வகையில் குளத்துப்புரவு பகுதிகளுக்கே அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது.
இதையடுத்து அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பிரதான கால்வாய்களான தோவாளை மற்றும் அனந்தனாறு கால்வாய்களில் தண்ணீர் திருப்பி விடப்படாமல் பழையாற்றில் விடப்படுகிறது. இதன் மூலம் தேரூர், சுசீந்திரம் உள்ளிட்ட குளங்களுக்கு இந்தத் தண்ணீர் செல்கிறது.இது குறித்து முன்னோடி விவசாயி செண்பக சேகரபிள்ளை கூறியது: விவசாயிகளின் நீண்ட கோரிக்கைக்குப் பிறகு பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதான கால்வாய்களில் தண்ணீர் விடப்படவில்லை. பழையாற்றில் மட்டுமே தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. தற்போது விடப்படும் 141 கன அடி தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பில்லை என்றார் அவர்.இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியம் கூறியது:
பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு சற்று அதிகரிக்கப்பட்டு 141 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் முதலில் குளத்துப்புரவு பகுதிகளுக்கு முக்கியமாகத தண்ணீர் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் பழையாற்றில் தண்ணீர் திருப்பி விடப்பட்டு தேரூர், சுசீந்திரம் உள்ளிட்ட குளங்கள் நிரப்படுகின்றன.
தோவாளை, அனந்தனாறு உள்ளிட்ட கால்வாய்களில் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. ஓரிரு நாள்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்து விடும். பின்னர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு அந்தக் கால்வாய்களிலும் தண்ணீர் விடப்படும் என்றார் அவர்.