தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக நெடுந்தூரம் பயணிக்க வேண்டியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் வாலி, குஷி என்ற இரண்டு ஹிட் படங்களை இயக்கிய பிறகு அவருக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் அதையடுத்து தன்னைத்தானே இயக்கிக்கொண்டு வந்த எஸ்.ஜே.சூர்யா, வேறு சில இயக்குனர்களின் படங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் அவரது மார்க்கெட் சரிந்து விட்டது.
இந்தநிலையில், தற்போது படம் இயக்குவதை ஓரங்கட்டிவைத்து விட்டு, முழுநேர நடிகராக உருவெடுத்துள்ள எஸ்.ஜே.சூர்யா, சில படங்களில் நாயகனாக நடித்துள்ள போதும், விஜய்யின் மெர்சல், மகேஷ்பாபுவின் ஸ்பைடர் ஆகிய மெகா படங்களில் அதிரடி வில்லனாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களிலுமே எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் படுபயங்கரமான முறையில் படமக்கப்பட்டுள்ளதாம்.
அதனால் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்போது அவரது வில்லன் மார்க்கெட் சூடுபிடித்து விடும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் இறங்கியதை அடுத்து கோலிவுட்டில் சரியான வில்லன் இல்லாதநிலையில், அந்த இடத்தை எஸ்.ஜே.சூர்யாதான் பிடிப்பார் என்கிறார்கள்.