யானைக் கூட்டத்தால் அனாதையாக விடப்பட்ட குட்டி யானை, ஓடி வந்து தன் பாதுகாவலரின் மடியில் பாசத்தோடு படுத்துக் கொள்ளும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
தாய்லாந்தில் புவங் கன் (Bueng Kan) வனப்பகுதியில், கடந்த ஏப்ரல் மாதம் சேற்றுக்குள் தனியே தத்தளித்தது. இதைக் கண்ட வனத்துறை அதிகாரிகள் அதை மீட்டு சபக்யூவ் (Chabakeaw) என பெயரிட்டனர்.
5 மாதங்களாக வனத்துறையால் வளர்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி அதை மீண்டும் வனத்துக்குள் விட்டனர். ஆனால், இரண்டே தினங்களில் மீண்டும் அனாதையாக தனித்து விடப்பட்டதால், சோகமாக வனத்துக்குள் தனியே நின்றிருந்தது.
அதை வனத்துறையினரே மீண்டும் பராமரிப்பு மையத்துக்கு அழைத்து வந்தனர். கடந்த வெள்ளியன்று தன் பராமரிப்பாளரை சில நாட்களே பிரிந்தபோதும், ஓடிச் சென்று பாசத்தோடும், உரிமையோடும் குழந்தையைப் போல் மடியில் படுத்துக் கொண்டது.
யானை மனிதர்களோடு நீண்ட நாட்கள் பழகியதால், அது காட்டு யானைகளுக்கான நடத்தையில் இருந்து வேறுபட்டிருக்கலாம் என்றும், அதனால், யானைக் கூட்டம் சபக்யூவை நிராகரித்து துரத்தியிருக்கலாம் என்றும் தாய்லாந்து வன உயிர் நிபுணர் பிச்செட் நூன்டோ (Pichet Noonto) தெரிவித்துள்ளார்.

