ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்து உள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார். இவர் கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர். ரஜினி நடித்த ‛சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான். ஷியாம் மோகன் இசை அமைத்துள்ளார், அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி ஆறு ராஜா கூறியதாவது: பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது. அவர்கள் அதன்மூலம் தங்கையை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்.
இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை.. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வேறு ஒரு கதாநாயகி. கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளிலேயே, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்றார். நாங்கள் அவருக்காக காத்திருந்தோம். பின்னர் தான் அவர் தன் காதலருடன் ஓடிப்போன தகவல் கிடைத்ததது. பின்னர் ஸ்வேதா ஜோயல் என்பரை ஒப்பந்தம் செய்து படத்தை முடித்தோம்.
நாயகியின் தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூ ராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வத்தலகுண்டு, தாண்டிக்குடி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. என்றார்.

