முற்றிலும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் நெஞ்சில் ஒரு ஓவியம். ஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.ஜோதிபிள்ளை, சுகுணா கந்தசாமி தயாரித்திருக்கிறார்கள். வெற்றி ஹீரோவாகவும் அக்ரிஷா ஹீரோயினாகவும் நடித்திருகிறார்கள். தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ஜோதிபிள்ளை மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ளார். ராஜாமணி ஓளிப்பதிவு செய்துள்ளார், ஸ்டீபன்ராயல் இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கி இருப்பதும் ஜோதிப்பிள்ளைதான். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது ஒரு காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த, ஹாரர் திரைப்படம். மூன்று கோணங்களில் பயணிக்கும் திரைக்கதையை உள்ளடக்கிய கதை இது. இந்த படத்தில் கதாநாயகி அக்ரிஷாவிற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அவரை சுற்றிதான் இந்த மூன்று திரைக்கதையும் பயணிக்கும்.
ஓவியராக இருக்கும் நாயகன் வெற்றி, பெயிண்டிங் துறையில் மிகப்பெரிய சாதனை புரிவதையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கிறார். இடையில் காதலில் விழும் அவருக்கு சில பிரச்னைகள் வருகின்றன, அந்த பிரச்சனைகளை எப்படி கையாண்டார், அதிலிருந்து எப்படி வெளியேறி வாழ்கையில் ஜெயித்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. சென்னை, ஆந்திரா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது. என்றார் இயக்குனர் ஜோதிபிள்ளை.

