இந்திய அணி தேர்வுக்குழு உறுப்பினர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி உள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் ஆண்டுதோறும் ‘ஏ,பி,சி’ என மூன்றுவிதமான ‘கிரேடில்’ ஒப்பந்தம் செய்யப்படுவர். ஒவ்வொரு ‘கிரேடுக்கும்’ சம்பளம் மாறுபடும். சமீபத்தில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்தியது. இதைப்போல, உள்ளூர் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளின் சம்பளமும் அதிகரிக்கப்படலாம் எனத்தெரிகிறது. இந்நிலையில், இதே கோரிக்கையை தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ ‘சீனியர்’அணிக்கான தேர்வுக்குழு உறுப்பினர் ஒரு ‘சீசனுக்கு’ ரூ.60 லட்சம், ‘ஜூனியர்’ அணிக்கான தேர்வுக்குழு உறுப்பினர் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் சம்பளமாக பெறுகின்றனர். இந்த சம்பள விகிதம் 2012ல் அமைக்கப்பட்டது.
இது, 4 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை என்பதால் சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றனர். உறுப்பினர்களை விட தலைவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதால் சம்பளமாக ரூ. 1.2 கோடி வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இவர்களின் தற்போதைய சம்பளத்திலிருந்து 30 முதல் 35 சதவீதம் மட்டுமே உயர்த்தித்தரப்படும்,’’ என்றார்.