திமுக உட்பட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில்பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் நீட் தேர்வு அனாவசியமாக அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கிறது என்பது நேற்றைய தினம் வெளியாகி உள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கூட அதிக இடங்கள் கிடைத்திருக்கிறது. சமூக நீதியும், சம நீதியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம், கிராமப்புற மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் மாணவர்களை குழப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த அரசியல் எதிர்மறையை நினைத்து சனிக்கிழமை பாஜக சார்பில் திருச்சி உழவர் சந்தையில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரச்சாரத்தை முறியடிக்கவே இக்கூட்டம். நீட் தேர்வில் உள்ள உண்மை நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவே இக்கூட்டம்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.