நேற்று உலக குழந்தைகள் தினம். இதையொட்டி கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்கள் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அவர்களுடன் சகஜமாக தரையில் அமர்ந்து உரையாடினார். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
குழந்தைகள் கமலின் பிறந்தநாளுக்காக தயார் செய்து வைத்திருந்த பாடலை பாடினார்கள். ஷக்தி என்ற ஒரு பார்வையற்ற மாணவி எங்களுக்கு பிரைலி கீ போர்ட் கொண்ட கம்ப்யூட்டரும், பிரிண்டரும் வாங்கித் தருமாறு கமலிடம் கேட்டார். அதை உடனே வாங்கித் தருவதாக கமலும் உறுதி அளித்தார்.
பின்னர் அவர் அந்த குழந்தைகளிடையே பேசியதாவது: நானும் இந்த பள்ளியின் மாணவன் தான். உங்களில் ஒருவன் தான் எப்படி என்று கேட்கிறீர்களா? 32 வருடங்களுக்கு முன்பு நான் ராஜபார்வை என்ற படத்தில் பார்வையற்றவனாக நடித்தேன். அப்படி நடிப்பதற்கு இங்கு வந்து பிரைய்லி மொழியையும், சைகை பாசையையும் கற்றுக் கொண்டேன். நீங்கள் வாழ்த்தியது எனக்கு என் பாதையில் வேகமாக செல்லத் தூண்டியிருக்கிறது.
