தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. ரஜினியுடன் மீனா, குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா, நடிகர் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றதோடு, அவரோடு இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதை தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் குஷ்பு, நடிகர் ரஜினிக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
அதில், என்னுடைய இளைய மகள் அனந்திதாவின் நீண்ட நாள் கனவு, ரஜினியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பது. அது நிறைவேறி இருக்கிறது. இந்த நிகழ்வின் போது தனது இதயமே நின்று விட்டது போன்று உணர்ந்ததாக அனந்திதா தெரிவித்தார். அப்படியொரு மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, என்னுடைய இளைய மகளுக்காக தன்னுடைய நேரத்தையும் செலவிட்ட ரஜினிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

