பாகுபலி படங்களுக்கு பின் இந்திய அளவில் பிரபலமாகிவிட்ட இயக்குனர் ராஜமவுலி, அடுத்தப்படியாக ‛ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர்., அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரகனி உட்பட பலர் நடிக்கின்றனர். சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கும் வரலாற்று படம் இது.
இப்படம் ஜூலை 30ல் வெளியாவதாக படம் துவங்கிய சமயத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடக்காததாலும், ராம்சரண், ஜூனியர் என்டிஆர்., ஆகியோருக்கு அடுத்தடுத்து காயம் ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு தடைப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டிலேயே படம் வெளியாகும் என ராஜமவுலி சமீபத்தில் அறிவித்து இருந்தார். தற்போது 2021, ஜன., 8ல் தான் படம் வரும் என அறிவித்துள்ளனர்.
‛‛இந்த காத்திருப்பு மிக நீண்டது என எங்களுக்கு தெரிகிறது. படம் சம்பந்தப்பட்ட புது தகவல்களை இடையே ரசிகர்களாகிய உங்களுக்கு தருவோம் என நாங்கள் உறுதியளிக்கிறோம்” என ராஜமவுலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

