நிஜ வாழ்க்கையில் நாம் செய்ய முடியாதவற்றை திரையில் ஹீரோக்கள் பொய்யாகச் செய்வதை ரசித்துக் கொண்டாடுவது தான் ஹீரோயிசம். அந்த ஹீரோயிசத்தில் போலீஸ் கதாபாத்திரங்கள் தனி வகை. மற்ற ஹீரோயிசத்திற்கு அதிகாரம் கிடையாது, போலீஸ் கதாபாத்திரத்திற்கு அதிகாரம் உண்டு. அதனால் அவை சிறப்பு வாய்ந்தவை. போலீஸ் கதாபாத்திரங்கள்தான் பல ஹீரோக்களுக்கு சிறந்த ஹீரோயிசமாக அமைந்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன.
ரஜினிகாந்த் அப்படி நடித்த படங்களில் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது ‘மூன்று முகம்’ படத்தில் நடித்த அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரம்.
அந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் “கொடி பறக்குது (1988) , நாட்டுக்கு ஒரு நல்லவன் (1991), பாண்டியன் (1992) ஆகிய படங்களில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால், ‘மூன்று முகம்’ படம் தவிர மற்ற போலீஸ் கதாபாத்திரப் படங்கள் அவருக்கு தோல்விப் படங்களாகத்தான் அமைந்தன.
1992ல் வெளிவந்த ‘பாண்டியன்’ படத்திற்குப் பிறகு சுமார் 28 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்தான் ‘தர்பார்’.
‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் தவிர மற்ற படங்களில் அவர் ஏற்று நடித்த போலீஸ் கதாபாத்திரங்களான ”ஈரோடு சிவகிரி (கொடி பறக்குது), சுபாஷ் (நாட்டுக்கு ஒரு நல்லவன்), பாண்டியன் (பாண்டியன்)” ஆகிய கதாபாத்திரங்கள் அதிகம் பேசப்படவில்லை.
‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் மட்டும் தான் இன்னும் ரசிகர்களின் மனதில் பதிந்த ஒன்றாக உள்ளது. அந்த அளவுக்குப் பெயர் போன அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தை ‘தர்பார்’ ஆதித்யா அருணாச்சலம் அடிச்சித் தூக்குவாரா ?.
இல்லை, ‘அ(லெக்ஸ் பாண்டியன்)’ வுக்குப் பிறகுதான் ‘ஆ(தித்யா அருணாச்சலம்)’ என பின் தங்குவாரா என்பது பொங்கலுக்குத்தான் தெரிய வரும்.

