சினிமாவில் நடிகர்கள் காதலிப்பதும், பிரிவதும், பின்னர் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படி இப்போது லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர்கள் அபி சரவணன் – அதிதி மேனன்.
பட்டதாரி படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக வாழ்ந்தும் வந்தனர். தற்போது அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
நடிகை அதிதி மேனன், நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் அபி சரவணன் மீது புகார் கொடுத்தார். நாங்கள், பதிவு திருமணம் செய்தது போல், அபி சரவணன், போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லை. பல பெண்களுடன், அவருக்கு, பழக்கம் ஏற்பட்டது. இதனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அவருடன் இருந்த காதலை முறித்துக்கொண்டேன். காதலித்தபோது, இருவரும் சேர்ந்து எடுத்த படங்கள் மற்றும் போலி பதிவு திருமண ஆவணங்களை, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அவதுாறு பரப்பி வருகிறார் என கூறினார்.
உண்மையில் இருவருக்கும் இடையே என்ன தான் பிரச்னை.? இதுப்பற்றி விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல்….
அபி சரவணனும், அதிதி மேனனும் காதலித்தது உண்மை தான் என்றும், மதுரையில் பதிவு திருமணம் செய்து, சென்னையில் தனியாக வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், இருவீட்டாரது பெற்றோருக்கும் இது தெரியும் என கூறுகின்றனர். மேலும் அதிதிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட, அது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுவே இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துள்ளது என்கிறார்கள்.
இதற்கிடையே, அதிதி மேனன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், சட்டரீதியாக அபி சரவணன் தயாராகி வருகிறார். அதிதி மேனனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் அவர் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

