நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின், இரண்டாம் கட்ட நிறைவு விழாவும் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
அரச நிறுவனங்களினால் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து, அரச பொறிமுறையின் மூலம் உயர்ந்த வினைத்திறனுடன் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் கடந்த மாதம் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதேநேரம் ‘ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா’ தொழில் வழிகாட்டல் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டல் மத்திய நிலையம் இன்று ஜனாதிபதியால் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.