பாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்!
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் மக்கள் எழுச்சி ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொரளை என்.எம்.பெரேரா மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்தை அசைத்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு மக்கள் வலுப்பெற்றுள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை துரித கதியில் நடத்தாவிட்டால் பாரியளவு மக்கள் கிளர்ச்சியொன்று வெடித்து அரசாங்கம் கவிழ்க்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பாதயாத்திரையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இணைந்து கொண்டிருந்த காரணத்தினால் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தி வரும் அரசாங்கம், வேறு தேர்தல்களையும் இவ்வாறு காலம் தாழ்த்தக் கூடும்.
பாதயாத்திரையில் இணைந்து கொண்ட மக்கள் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பாதயாத்திரைகளில், போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளது.
தொழிற்சங்கவாதியான பிலிப் குணவர்தனவின் போராட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள் இன்று நடைபெறும் போராட்டங்களில் தலைமை ஏற்றுள்ளனர்.
அரசியல் அமைப்பு பற்றிய திருத்தங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தேசிய சுதந்திரத்தை மேற்குலக நாடுகளுக்கு அடகு வைப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அரசாங்கம் சமஷ்டி முறையில் அதிகாரப் பகிர்வினை வழங்க முயற்சிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.