தலைக்கேறிய போதையால் வாலிபர்களது முகத்தில் ஆசிட் வீசிய நபர்: 8 ஆண்டுகள் சிறை
இங்கிலாந்தில் வாலிபர்களது முகத்தில் ஆசிட் தாக்குதல் நடத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Essex – இல் நண்பர்கள் 6 பேர் விருந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக Ockendon ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த Alexander Bassey (17) என்ற நபர், சிறிது நேரம் ரயில் நிலையத்தில் உலாவியுள்ளார். அதன்பின்னர் ஜாலியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நண்பர்களின் முகத்தில் ஆசிட்டினை தெளித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்த ஆசிட் வீச்சின் தாக்கத்தால், அந்த 5 பேரும் வலி தாங்க முடியாமல் தவித்துள்ளனர், இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதில், Lee Elliott என்பவர் மரணத்தின் விளிம்பிற்கு சென்றுள்ளார், மற்றொரு நபரின் இடது காது கேட்கும் திறனை இழந்துள்ளது. மேலும் Tyrone Terry (17) என்ற வாலிபரின் வாய்பகுதி மற்றும் தொண்டை தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றத்தை புரிந்த Bassey- ஐ கைது செய்த பொலிசார், அவனை விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தினர். சம்பவம் நடைபெற்ற அன்று இவர், அதிக போதையில் இருந்ததன் காரணமாக தன்னிலையை மறந்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்திற்கு பின்னணி காரணமாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. அந்த வாலிபர்களை இவர், இதற்கு முன்னர் பார்த்ததும் கிடையாது. அந்த நண்பர்கள் அனைவரும் யாரையும் கண்டுகொள்ளாமல் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
போதையின் உச்சத்தில் இருந்த இவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை Basildon Crown நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. அப்போது குற்றவாளியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, எதற்காக இப்படி ஒரு காரியத்தை செய்தாய், இது மிகவும் கடுமையான செயல் மட்டும் அல்லாமல் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இந்த செயலால் அந்த வாலிபர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மேலும், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இக்கொடூர குற்றத்தினை புரிந்த அந்நபருக்கு 8 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.