நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை மெரினா கடற்கரைச் சாலையிலிருந்து கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் அகற்றப்பட்டது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்ப் பேரினத்தின் தனிப்பெருங்கலை அடையாளமாகத் திகழ்பவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது திருவுருவச் சிலையை அதிக அளவில் காவல்துறையைக் குவித்து, இரவோடு இரவாக மெரினா கடற்கரைச் சாலையிலிருந்து அகற்றியிருக்கிறார்கள். இந்தச் செயல், பெருத்த அதிர்ச்சியையும் அளவிட முடியா பெருங்கோபத்தையும் ஏற்படுத்துகிறது. இது, சிவாஜி என்ற மாபெரும் கலைஞனுக்கு நேர்ந்த அவமானமில்லை. அவர் குடும்பத்துக்கு நேர்ந்த அவமானமில்லை, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நேர்ந்த அவமானம். மொழிப்போர் தியாகிகள், தமிழ் முன்னோர்கள் யாவரின் பெருமைகளையும் வரலாறுகளையும் சமகால இளைய தலைமுறை அறிந்திராவண்ணம் மூடிமறைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், நடிகர் திலகத்தின் சிலையும் அகற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்களின் உள்ளத்தில் உதிரத்தை வரவழைக்கிறது.
தமிழ்ப் பெருங்கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை மணிமண்டபத்தில் நிறுவுவதில் நமக்கு எவ்வித சிக்கலுமில்லை. அதேநேரத்தில், அதனை மெரினா சாலையிலிருந்து அப்புறப்படுத்தித்தான் மணிமண்டபத்தில் நிறுவுவோம் எனும் அரசின் பிடிவாதப்போக்கில் துளியும் உடன்பாடில்லை. அது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆகவே, தமிழர்களின் உணர்வினை மதித்து, அகற்றப்பட்ட நடிகர் திலகத்தின் சிலையை மெரினா கடற்கரையிலேயே நிறுவ வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், தமிழர்களின் அடையாளங்களை மறைத்தழித்த படுபாதகச் செயலுக்குத் துணைபோன வரலாற்றுப் பெரும்பிழை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வந்து சேரும் என எச்சரிக்கிறேன். இன்றல்ல என்றாலும், என்றாவது ஒருநாள் தமிழரின் அறம்சார்ந்த நாம் தமிழர் ஆட்சி தமிழகத்தில் தழைக்கும். அன்றைக்கு, தமிழர் அடையாளங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நடிகர் திலகத்துக்கு மாபெரும் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.