கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமெனில் மேலதிகமாக 5 பில்லியன் தேவையாகும். தற்போதுள்ள நிதி நெருக்கடியில் இவ்வாறானதொரு பாரிய தொகையை திரட்ட முடியாது என்பதால் , நாளாந்தம் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாலை மற்றும் இரவில் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
உயர்தர பரீட்சைகள் திங்கட்கிழமை (23) முதல் ஆரம்பமாகின. பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் நலன் கருதி குறித்த காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்காமலிருக்குமாறு கல்வி அமைச்சு, பரீட்சை திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களினால் மின்சாரசபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் கடந்த இரு தினங்களும் வழமை போன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டமையால் பல தரப்பினராலும் இதற்கு அதிருப்தியும் வெளியிடப்பட்டது.
இந்நிலையிலேயே செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணத்தை அதிகரிக்காமலிருக்க முடியாது. அதே போன்று தடையற்ற மின் விநியோகத்தை வழங்கவும் முடியாது. அனல் மின் உற்பத்திக்கான நிலக்கரி இறக்குமதி தொடர்பில் கடும் நெருக்கடி நிலவுகின்றது.
நிலக்கரியுடன் நாட்டை வந்தடையும் கப்பல்களுக்குரிய கொடுப்பனவை செலுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் காணப்படுகிறது.
கப்பல்களுக்கான கொடுப்பனவு மாத்திரமின்றி , உரிய நேரத்தில் கொடுப்பனவை செலுத்தாத காரணத்தினால் தாமதக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலைமையில் உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் 14 நாட்களும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமெனில் மேலதிகமாக 5 பில்லியன் தேவைப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு தெளிவபடுத்தினார். தற்போதுள்ள நிதி நெருக்கடியில் இந்த 5 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வது இயலாத காரியமாகும்.
எவ்வாறிருப்பினும் உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் நலன் தொடர்பிலும் அக்கறை காண்பிக்க வேண்டியுள்ளது.
எனவே நாளாந்தம் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் அதாவது மாலை 5 மணிக்கு பின்னரும் , இரவிலும் தலா ஒவ்வொரு மணித்தியாலங்கள் என இரண்டு மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கான செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்காக ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டிய தேவை கிடையாது என்றார்.