தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொச்சேஸ்ட்ரூம் நோர்த் வெஸ்ட் பல்கலைக்கழக மைதானம் 1 இல் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 சுப்பர் 6 குழு 1 போட்டியில் 2 ஓட்டங்களால் வெற்றியை இலங்கை தவறவிட்டது.
போட்டியின் கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 4 விக்கெட்கள் மீதமிருந்தன.
ஆனால், கடைசி ஓவரின் 4ஆம், 5ஆம் பந்துகளில் 2 விக்கெட்களை அநாவசியமாக இழந்ததால் இலங்கைக்கு கிடைக்கவிருந்த வரலாற்று வெற்றி நழுவிப் போயிற்று. அத்துடன் இறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் இலங்கை இழந்தது.
தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வி அடைந்தது.
முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகள் நிறைய பந்துகளில் ஓட்டம் பெறத் தவறியதே இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
4ஆம் இலக்க வீராங்கனை தெவ்மி விஹங்கா 23 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸ்களுடன் அதிரடியாக 37 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்கு உற்சாகம் ஊட்டினார். ஆனால், அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த முயற்சித்து, மொத்த எண்ணிக்கை 106 ஓட்டங்களாக இருந்தபோது 4ஆவதாக ஆட்டமிழந்து அணிக்கு நெருக்கடியை கொடுத்தது.
முன்வரிசையில் நெத்மி செனாரத்ன 36 ஓட்டங்களையும் அணித் தலைவி விஷ்மி குணரட்ன 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் மனூதி நாணயக்கார 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் கேலா ரினேக் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.
இதில் கேலா ரினேக் 43 ஓட்டங்களையும், ஜென்னா இவேன்ஸ் 22 ஓட்டங்களையும், மெடிசன் லேண்ட்ஸ்மன் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சில் விதுஷிக்கா பெரேரா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தெவ்மி விஹங்கா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.