நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் இன்று நடக்க உள்ள TNPL கிரிக்கெட் தொடரில், மதுரை சூப்பர் ஜெயன்ட், டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வர்ணனையாளராக செயல்படவுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பிரெட் லீ பேசியது:
‘‘வணக்கம். நான் சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து வளர்ந்தவன். சர்வதேசப் போட்டியில் நான் அவருக்குப் பந்துவீசுவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் நான் அவருக்கு முதல் பந்து வீசி முடித்ததும், அவரிடம் ஆட்டோகிராப் கேட்கலாமா என தயக்கத்தில் இருந்தேன்’’ என பிரெட் லீ மலரும் நினைவுகளில் மூழ்கினார்.
எம்.எஸ்.தோனிக்கு எதிராக விளையாடியது குறித்து மாணவர் எழுப்பிய கேள்விக்கு ‛‛தோனி பணிவானவர். அவர் அருமையான மனிதர்’’ என பிரெட்லீ சொன்னதும் அரங்கம் அதிர்ந்தது. அதேபோல, கிரிக்கெட் வீரராகவில்லை எனில் என்னவாகி இருப்பீர்கள் எனக் கேட்டதற்கு, ‘பாலிவுட் நடிகராகி இருப்பேன்’ என ப்ரெட் லீயிடம் இருந்து பளிச்சென பதில் வந்தது. அப்ளாஸ் அள்ளியது.
திண்டுக்கல் மைதானம் குறித்த கேள்விக்கு அவர் ‘‘கடந்த டி.என்.பி.எல் தொடரில் இந்தக் கல்லூரியில் நடந்த போட்டிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றினேன். விளையாடுவதற்கும் சரி, வர்ணனை செய்வதற்கும் சரி இது ஏற்ற இடம். இது அருமையான கிரவுண்ட். இந்தக் கல்லூரியின் விருந்தோம்பல் பிடித்திருக்கிறது. இங்கு நடக்கும் இரண்டாவது டி.என்.பி.எல் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’’ என்றார்.
கடைசியாக, தமிழ்நாடு உடனான அவரது தொடர்பு குறித்து கேட்டபோது, ‘‘தமிழ்நாடு ரொம்பப் பிடிக்கும். அழகான, அருமையான கலாசாரம் நிறைந்த இடம் இது. எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் இந்தி தெரியும். எனக்குத் தமிழ் கற்க ஆசை. ஆனால், தமிழ் கற்பது அவ்வளவு எளிதல்ல’’ என்றார் வேகப்புயல்.