தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லையில் ‘அன்புச் சுவர்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அன்றாடம் பயன்படுத்தும் உடைகள், புத்தகங்கள், காலணி, பொம்மைகள் எனப் பழைய பொருள்களை என்ன செய்வது எனத் தெரியாமல் குப்பைத் தொட்டிகளில் போடும் நபர்கள் இருக்கிறார்கள். மறுபுறத்தில், உடைகள், காலணிகள் இல்லாமல் தடுமாறும் ஏழை மக்கள் வசிக்கிறார்கள்.
தேவையில் இருப்பவர்களும், அவசியம் இல்லாததால் குப்பைத் தொட்டியில் போடும் நபர்களும் நேருக்கு நேர் சந்திப்பதில்லை. அதன் காரணமாகவே ஒரு தரப்பின் தேவை மற்றொரு தரப்புக்குப் புரிவதில்லை.
இதையடுத்து, இரு தரப்பு மனிதர்களையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கும் முயற்சியே, ‘அன்புச் சுவர்’ திட்டம். தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரியால் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகச் சுவரில் இதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள கோர்ட் ஸ்டாண்டில் பழைய சட்டை, பேன்ட், வேட்டி உள்ளிட்டவற்றை வைக்கலாம். அத்துடன், சுவரில் உள்ள தனித்தனி ஷெல்ஃபில் புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் போன்றவற்றை வைக்கலாம். அவசியம் உள்ளவர்கள், அவர்களாகவே அதனை எடுத்துச் செல்லலாம்.
இந்தத் திட்டத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார். இதற்கு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ”பொதுமக்களுக்குத் தேவையற்ற ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் உள்ளிட்ட இதர பயனுள்ள பொருள்களை ஏழை மக்களுக்குக் கொடுக்கும் விதமாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. சிலருக்குப் பிறரிடம் உதவிகளைக் கேட்பதில் தயக்கம் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் வந்து இந்தப் பொருள்களைத் தங்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
இந்தத் திட்டத்தின் மூலமாக யார் பொருளை வைத்தார்கள் என்பதுவோ யார் எடுத்துச் சென்றார்கள் என்பதுவோ யாருக்குமே தெரியாது. முகம் தெரியாவரிடம் இருந்து கிடைத்த உதவி தேவையில் இருப்பவர்களை ஆறுதல் அடையச் செய்யும். அதனால் மக்கள் தாராளமாக உதவிகளைச் செய்ய முன் வரவேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஏழைகளுக்கு உதவிகரமாக அமைய உள்ள பாராட்டுக்குரிய திட்டம் இது!