விமான விபத்து.. பிரேசில் தேசிய கால்பந்து அணி வீரர்கள் நலம்! விபத்தில் சிக்கியது யார் தெரியுமா?
பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதாக முதல் தகவல் வந்தபோது, அது அந்த நாட்டு தேசிய கால்பந்து அணியாக இருக்கும் என்ற அச்சத்தில் ரசிகர்கள் உறைந்தனர். ஆனால் அந்த நாட்டு கிளப் அணி வீரர்கள் விபத்தில் சிக்கியதாக பிறகு உறுதி செய்யப்பட்டது.
கால்பந்துக்கு பெயர் பெற்ற பிரேசில் நாட்டில் பல்வேறு கிளப் அளவிலான அணிகள் உள்ளன. அதில் ஒன்றின் பெயர்தான், சபெகோன்சே. இவர்கள் பல்வேறு நாடுகளின் உள்நாட்டு அளவிலான கால்பந்து தொடர்களில் பங்கேற்று ஆடுவது வழக்கம். இதேபோன்ற ஒரு தொடர்தான், கோபா சுடமெரிகானா. கொலம்பியாவில் அட்லெடிகோ அணியை எதிர்த்து அந்த நாட்டு நேரப்படி நாளை மாலை 6.45 மணிக்கு ஒரு கால்பந்து போட்டி நடைபெறவிருந்தது.
அந்த போட்டியில் ஆடுவதற்காக சபெகோன்சே அணி பயணித்துள்ளது. சபெகோன்சே கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 72 பேர் இன்று பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவின் ரியோநெக்ரோ நகருக்கு சென்றபோதுதான் அந்த நாட்டு நேரப்படி இரவு 10.15 மணியளவில் அந்த நாட்டு வான் எல்லையில் வைத்து அந்த விமானம் நொறுங்கி விழுந்தது. பிரேசில் நாட்டு தேசிய அணிக்கு ரசிகர்கள் அதிகம்.
பிரேசில் அணியினர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானபோது, அந்த ரசிகர்கள்தான் அதிகம் அதிர்ந்துபோயினர். பின்னர் உள்ளூர் கிளப் அணியினர் விபத்தில் சிக்கிய விவரம் தெரியவந்தது. அதிர்ச்சி என்றபோதிலும், தங்கள் ஆதர்ஷ வீரர்கள் பத்திரமாக இருப்பதை பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டனர்.