ஜிம்பாப்வே வீரரை நோக்கி பந்தை வீசிய இலங்கை வீரர்! ஐசிசி அதிரடி நடவடிக்கை
ஜிம்பாப்வே – இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் போட்டியின் போது இலங்கை வேகப் பந்துவீச்சாளர், ஜிம்பாப்வே துடுப்பாட்டகாரரை நோக்கி பந்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்செயலில் ஈடுபட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலுக்கு போட்டிக் சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் இரண்டாவது ஓவரின் போது சுரங்க லக்மால் வீசிய பந்தை ஜிம்பாப்வே துடுப்பாட்ட வீரர் சிப்ஹபாஹா சந்தித்தார்.
பந்து லக்மாலிடம் செல்ல சிப்ஹபாஹா ஓடாமல் நின்றார். பந்தை பிடித்த லக்மால் உடனே சிப்ஹபாஹாவை நோக்கி வீசினார். அதிர்ஷ்டவசமாக பந்து சிப்ஹபாஹா மீது படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது, லக்மாலின் இச்செயல் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஐசிசி விதிமுறையை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக அவரின் போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும், கூடுதலாக இரண்டு குறைபாடு புள்ளிகள் வழங்கியுள்ளது. ஒரு வீரர் 24 மாதத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகள் பெற்றால், அவர் போட்டியிலிருந்து தடை செய்யப்படுவார் என்பது நினைவுக் கூரதக்கது.