இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபை செயலிழந்துள்ளதன் காரணமாக சம்மேளன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், இந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாததன் காரணமாக தங்களது குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளதாக சம்மேளனத்தில் தொழில்புரியும் ஊழியர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்தனர்.
இந்த சிக்கல் தொடர்பாக விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோருக்கு சில சம்மேளன ஊழியர்கள் அறிவித்தபோதிலும் இதுவரை ஒரு பதிலும் கிடைக்கவில்லை என சம்மேளன அதிகாரி ஒருவர் கூறினார்.
மார்ச் மாதத்திற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. தமிழ் -சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வருடா வருடம் ஏப்ரல் மாத சம்பளம் முதல் வாரத்திலேயே வழங்கப்படுவதுண்டு. ஆனால், சம்மேளனத்தின் நிருவாக சபை செயலிழந்துள்ளதால் தமிழ் – சிங்கள புத்தாண்டையும் கொண்டாட முடியாத அவல நிலையை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகம் உருப்படியாக, சட்ட ரீதியாக இயங்கும்வரை நாடு முழுவதும் உள்ள கால்பந்தாட்ட சம்மேளன ஊழியர்கள் 75 பேர் சம்பளப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சுவதாக ஊழியகர்கள் சிலர் தெரிவித்தனர்.
சில வாரங்களுக்கு முன்னர் சம்மேளனத் தலைவரின் கெடுபிடி தாங்க முடியாமல் சில நிருவாக உத்தியோகத்தர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர். இன்னும் சில சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் விலகிச் சென்றனர். இது இவ்வாறிருக்க, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்படுள்ளார்.
சம்மேளனத்தின் நிறைவேற்றுச் சபை கோரம் இழந்துள்ளதால் அது செயிலிழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் உட்பட அமைச்சு அதிகாரிகளும் நன்கு அறிந்துள்ளபோதிலும் அவர்கள் யாருமே தங்களது சம்பளப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை என சம்மேளனத்தின் மற்றொரு அதிகாரி சுட்டிக்காட்டினார்.
எனவே, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகள், கால்பந்தாட்ட வீரர்கள், கழக மட்ட அதிகாரிகள் ஆகியோர் எதிர்நோக்கியுள்ள சகல பிரச்சினைகளுக்கும் முடிவுகட்டும் வகையில் சம்மேளனத்தின் பொதுச் சபையை சுயாதீனமாகக் கூட்டி பீபாவின் தடையை நீக்குவதற்கும் பீபாவின் கோரிக்கைக்கு அமைய யாப்பு விதிகளை திருத்தி அமைத்து தேர்தல் குழு ஒன்றை நியமித்து நிருவாக சபைத் தேர்தலை நடத்தவும் பொதுச் சபைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என்பதே கால்பந்தாட்ட குடும்பத்தினரின் ஏகோபித்த வேண்டுகோளாகும்.