கருணாவை பார்க்க சிறைக்குச் சென்ற விமல், கம்மன்பில
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரை பார்ப்பதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, சி.பி. ரத்நாயக்க உள்ளிட்டோர் சிறைச்சாலைக்கு சென்று சென்று கருணா மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனம் ஒன்றை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கருணா அண்மையில் கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கையெழுத்துக்களை போலியாக இட்டு போலி ஆவணம் ஒன்றை தயாரித்து, அதனை ஊடகங்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அத்தநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.