அலெப்போவில் இருந்து மக்கள் வெளியேறும் சூழலை ஏற்படுத்த பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அழைப்பு
அலெப்போவில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்கான சூழலை ஏற்படுத்துமாறு, சிரிய அரசாங்கம் மற்றும் ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார்.
பெல்ஜியத் தலைநகர் பிரெஸ்ஸெல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கூறிய அவர், “இன்றைய ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில் நாம் பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். குறிப்பாக குடியேற்றவாசிகளின் பிரச்சினை, ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்தல் என்பவை தொடர்பான கலந்துரையாடல்களும் இதில் உள்ளடக்கம். ஆயினும் மிக முக்கியமாக, சிரியாவில் தொடரும் பதற்ற நிலை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
கிழக்கு அலெப்போவில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என அந்நகர மேயர் விடுத்த கோரிக்கை தொடர்பாகவும் நாம் ஆராய்ந்தோம். இந்த இலக்கை அடைய சிரிய ஜனாதிபதி பஷர் அல்- அசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய தரப்பினர் பொறுப்பாளிகளாக உள்ளனர். இவர்களே அங்கு சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதேவேளை இந்த கூட்டத்தின்போது, சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க பிரித்தானிய 20 மில்லியன் பவுண்ஸ் வழங்கும் என மே உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.